Showing posts with label தமிழ் இனி மெல்லச்சாகும். Show all posts
Showing posts with label தமிழ் இனி மெல்லச்சாகும். Show all posts

Thursday, November 3, 2011

சர்ச்பார்க் ஸ்டூடன்டின் சிறுபிள்ளைத்தனம்

என்னதான் இணையதளத்தில் படித்தாலும், புத்தகங்களைப் படிப்பதில் உள்ள ஆத்மா திருப்தியே தனி. அந்த நிறைவை புத்தக வாசிப்பை பழக்கமாக, விருப்பமாக கொண்டவர்களாலேயே உணர முடியும். எது எப்படி இருந்தாலும், நூலகத்தை மூடுவது என்பது, தான் பெற்ற குழந்தையை தனது கைகளாலேயே கொலை செய்வது போன்றது. இரண்டு செயல்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. ஜெ. செய்வது இமாலயத்தவறு மட்டுமல்ல, வரலாற்றுப்பிழையும் கூட

 

தாலி அறுத்தவள் வீட்டில் தலா தலா பெருதனம் என்பார்கள். அதே போல் தமிழ்நாட்டின் நிலை உள்ளது. தமிழகத்தை பிடித்த பீடைகளான திமுக, அதிமுக இடையில் சிக்கி தமிழகம் சீரழிகிறது. நூற்று எழுபத்திரண்டு கோடி செலவில் நூலகம் அமைக்கவில்லை என்று யார் அழுதார்கள்? நூலகமே காணாத கிராமப்புறங்களும், சரிவர பராமரிக்கப்படாத நகர்ப்புற நூலகங்களும் இருக்கும் போது, அண்ணா நூற்றாண்டு நூலகம் தேவை தானா? மேலும், அண்ணா திமுக என்ற கம்பெனியின் ஸ்தாபகர். அவரின் நூற்றாண்டு விழாவை கம்பெனி செலவில் கொண்டாடியிருக்க வேண்டும். அதற்கு அரசுப்பணத்தை வீணடித்ததே தவறு. ஒழியட்டும். இப்போது கொட நாட்டு அரசி வந்ததும் அதை மாற்றியிருப்பது முழுக்க, முழுக்க காழ்ப்புணர்ச்சி இல்லாமல் வேறு என்ன? ஏற்கனவே, புதிய தலைமை செயலகத்தை தன் விருப்பம் போல் பயன்படுத்த உத்தரவிட்டுள்ள ஜெயா இன்னும் இது போல் என்னென்ன தண்ட செலவுகளை செய்ய போகிறாரோ? தட்டி கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்ட பிரசண்டன் என்ற கதையாக, அராஜக திமுகவின் அருமை தலைவியை கேள்வி கேட்க இங்கு நாதி இல்லை. கேட்கவேண்டிய எதிர்கட்சி தலைவர் எங்கு இருக்கிறார் என்பதே தெரியவில்லை.

 

கட்சியை உடைக்க போகிறார்கள் என்றதுமே அவர் பல்டி அடித்து ஜெயா காலில் சரணாகதி அடைந்து விட்ட விஜயராஜிடம் வீரத்தை எதிர்பார்க்க முடியாது. பேயாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்பதை ஜெயா ஆட்சி செய்தால் விபரீதங்கள் அரங்கேறும் என்று மாற்ற வேண்டியது தான். அடுத்த நான்கரை ஆண்டுகள் தமிழகத்துக்கு ஏழரை. மொத்தத்தில் ஜெயாவின் இந்த முடிவு ஆணவத்தின் வெளிப்பாடேயன்றி,ஆதரிக்கத்தக்கதல்ல.

 

நூலகங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.  பெரும்பாலான இளைஞர்கள் தேர்வில் "பாஸ்" ஆக வேண்டும் என்ற நோக்கோடுதான் கல்விச்சாலைகளுக்கு செல்கின்றனர். குறிப்புக்களையும் தகவல்களையும் தேடுபவர்கள் சுலபமாக இணைய தளம் மூலமாக தேடிக்கொள்கிறார்கள். ஏற்கனவே இருக்கும் நூலகங்கள் சரிவர பராமரிக்கப்பட்டாலே போதும் என்பதுதான் உண்மை நிலை. எப்படியோ, தேவையோ தேவை இல்லையோ, விளம்பரத்திற்காக ஒரு பெரிய நூலகத்தை கட்டியாகி விட்டது. இதனால் பயன் அடைந்தவர்கள் மார்ட்டின் போன்றவர்கள் என்பதும் உண்மைதான். இந்த நிலையில் குழந்தைகள் மருத்துவ மனை உருவாக்க வேண்டுமென்றால் புதிதாக கட்டுவதுதான் சிறந்ததாக இருக்குமே அன்றி இருக்கும் நூலக கட்டிடத்தை மாற்றுவது மற்றவர்கள் குறை காண வழி வகுக்கும்.

 

பணம் வீணாவது ஒரு புறம் இருக்கட்டும்! இன்றைய டிவி, செல்போன் கலாச்சாரத்தில், வாசிக்கும் பழக்கமே இன்றைய இளைய சமுதாயத்திடம் குறைந்து வருகிறதே! கன்னிமாரா போன்ற பெரும் நூலகங்களில் கூட முன்பு இருந்ததுபோல் சீரியசாகப் படிப்போர் எண்ணிக்கை குறைந்து விட்டது!பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் நூலகம், நூலகரே இல்லாதபோது , சென்னையில் இன்னொரு நூலகம் எதற்கு? வாசிப்புப்பழக்கத்திற்கு நினைவுச்சின்னமாகவா? வாசிக்கும் பழக்கத்தை பெரும் நூலகங்களால் தூண்ட முடியாது! சிற்றூர் வரை நூலக இயக்கம் போதுமான நிதி ஆதாரத்துடன் துவக்கப் பட்டாலே வளரும்! மற்றபடி அண்ணா, அம்பி நூலகமெல்லாம் வெறும் விளம்பரக் கட்டிடமே! ஊழல் கட்டிடங்களில் சரஸ்வதி குடியிருக்க மாட்டாள்!( சொந்த புத்தகங்களால் தன் வீட்டிலேயே நூலகம் அமைத்து வாசிக்கும் பழக்கமுள்ள ஜெயலலிதா சிந்திப்பாரா? )

 

இந்தியாவிலேயே அதி நவீன வசதிகள் கொண்ட முதல் நூலகம் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம்தான். எட்டு தளங்களைக் கொண்ட இந்நூலகத்தில் ஒவ்வொரு தளமும் ‘ஏ’ பிரிவு மற்றும் ‘பி’ பிரிவு என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க குளுகுளு வசதியோடு கட்டப்பட்டுள்ள இந்த நூலகத்தின் அனைத்து தளங்களிலும் சுற்றுச் சூழலுக்கு தீங்குவிளைவிக்காத சி.எஃப்.எல். விளக்குகள் பொறுத்தப்பட்டுளளன. இளநீலநிற, கண்ணாடி சுவர் வழியே சூரிய வெளிச்சம் முழுமையாக கட்டடத்திற்குள்ளே செல்லும் படியாக வடிவமைக்கப்பட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘பசுமை கட்டடமாக’ கட்டப்பட்டுள்ளது. இந்நூலகம் மாற்றப்படுவது தொடர்பாக எதிர் கட்சி தலைவர் விஜயகாந், மற்றும் சரத்குமார், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஈவிகேஎஸ் இளங்கோவன், சீமான் ஆகியோர்ன் நிலைப்பாடு என்ன என்பது பற்றி இவர்கள் (தெளிவாக & ஸ்டெடியாக)? விளக்க வேண்டும். இது இவர்களது மிக முக்கியமான கடமையாகும். செய்வார்களா? "காலின் அளவுக்கு ஏற்ப செருப்பு தைக்கும் அல்லது வாங்கும் நிலை போய், செருப்புக்கு ஏற்ப காலை வெட்டும் காலம் வந்ததே! துக்ளக் தர்பார்!!

 

அராஜகம் ஆ தி மு க ஆட்சி அமைந்ததுமே ஆரம்பம். சமச்சீர் கல்வி ஆரம்பிப்பதில் குளறுபடி, தலைமைச் செயலகம் மாற்றியமைப்பு, பரமக்குடியில் ஆறு பேரை சுட்டுக் கொன்றது, காவல் நிலையம் சென்றவர் விசாரணைக்குப் பின் பலி என்று தொடர்கிறது. இப்போது அண்ணா நூலகம் மருத்துவமனை ஆகிறது. இந்த ஆட்சியில் அனைவரும் மருத்துவமனையில் அல்லது மரணக்கிடங்கில் இருக்க வேண்டியது தானா? ஆட்சியில் அமர்த்திய அருமை மக்களே யோசியுங்கள்…

 

யார் இட்ட சாபமோ நம் மாநிலம் கடந்த 44 ஆண்டுகளாக இந்த இரண்டு தீய சக்திகளிடமும் மாட்டிக்கொண்டு சீரழிந்து வருகிறது!ஆட்சிக்கு வந்து மாதம் ஆறு ஆகியும் ஜெயா மக்களுக்கு உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை. இப்போ தேவையில்லாமல் ஒரு நூலகத்தை மூட திட்டமிடுகிறார். அடுத்து என்ன? தமிழகத்தில் கருனைகிழங்கு பயிரிடவோ விற்கவோ தடை செய்ய சட்டமா?? அஇஅதிமுக என்பது "அ[வர்] தி[றப்பதை] இ[வர்] மூ[டுவார்] அ[ம்புட்டுதான்] கழகம்" என்பதின் சுருக்கமா?

Saturday, April 23, 2011

கண்ணகி கோயில்

வருடத்திற்கு ஒருநாள் மட்டும், அதுவும், குறிப் பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் மங்கலதேவி கண்ணகி கோவில் திருவிழா, சென்ற, ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. மாநாய்க்கன் மகளாய் பிறந்து, மாசாத்துவன் மகனான கோவலனை திருமணம் செய்து கொண்ட கண்ணகி, கணவருக்காக சகலத்தையும் இழந்த போதெல்லாம் பொறுமை காத்தவர். ஆனால், கணவரை இழந்ததும், பொங்கி எழுந்து, அதற்கு காரணமான பாண்டிய நாட்டு மன்னர் நெடுஞ்செழியனிடம் நீதி கேட்டவர். தன் கற்பின் சக்தியால், மதுரை நகரையே எரித்தவர். இன்றளவும் களங்கமற்ற பெண்ணொழுக்கத்தின் எடுத்துக்காட்டாகவும், கற்பின் தெய்வமாகவும், கற்புக்கரசியாகவும் போற்றப்படுபவர். அவர் நினைவாக, சேர மன்னன் கட்டியதுதான் இந்த மங்கலதேவி கண்ணகி கோவில். தமிழக - கேரள எல்லையில், குமுளி மலையின் உச்சியில்தான் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து பார்த்தால், சுற்றிலும் பசுமை சூழ்ந்திருக்க, ரம்மியமான சூழ்நிலையில், தேக்கடி அணையும், தமிழக கிராமங்களும் அழகாக தென்படும்.

சிலப்பதிகார நாயகியான கண்ணகிக்கு, இவ்வளவு உச்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. முற்காலத்தில், காட்டு வழியாக நடந்துதான், கோவிலை அடைய முடியும். கடந்த, 1817ல், கிழக்கிந்திய கம்பெனி நடத்திய சர்வேயை அடிப்படையாக வைத்து, பின்னாளில், மொழிவாரியாக எல்லை பிரித்த போது கூட, இந்த கண்ணகி கோவில் தமிழகத்தில்தான் இருக்கிறது என்று கேரளா ஒத்துக் கொண்டது. இந்த கோவிலுக்குச் செல்ல, கேரளாவின் குமுளியில் இருந்து, ஜீப்பில், 16 கி.மீ., தூரம் சென்றால்தான், கண்ணகி கோவிலை அடைய முடியும். ஜீப் செல்வதற்காக, எப்போது கேரள அரசு ரோடு போட்டதோ, அப்போது முதல் கண்ணகி கோவில் கேரளாவிற்கு சொந்தம் என்று கூற ஆரம்பித்து விட்டது. இதன் காரணமாக, வருடத்திற்கு ஒருமுறை வரும் சித்ரா பவுர்ணமியையொட்டி, ஒரு வார காலம் எடுக்கப்பட்ட விழா, கெடுபிடி காரணமாக, மூன்று நாட்களாகி, பின், ஒரே நாளாகி, அதுவும் இந்த வருடம் காலை, 9 மணி முதல் மாலை, 5 மணி வரை மட்டுமே என்று நிர்ணயித்து விட்டனர்.

இந்த ஒருநாள், கண்ணகியின் உருவம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரசாதம் வழங்கப்படும். இதற்காக, தமிழகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். ஜீப் கட்டணம், குமுளி வருவதற்கும், தங்குவதற்கும் என்று, பக்தர்கள் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கிறது; காரணம், கண்ணகியின் மீது கொண்ட ஈடுபாடு.
பழமையான, பாரம்பரியமான, பல்வேறு தமிழ் கல்வெட்டுக்களை கொண்டு, தமிழர்களின் அடையாளமாக திகழும் இந்த கண்ணகி கோவிலை பாதுகாக்கவும், பராமரிக்கவும் வேண்டும். கோவில் மீண்டும் தமிழர்களுக்கே என்று மீட்டு எடுக்க வேண்டும்.

எப்படி செல்வது?

image

இந்த வருடம் என்னுடைய நண்பர்கள் சிலர் அங்கு சென்று வந்தனர்.  முதலில் கம்பம் சென்று, பின்பு கூடலூர், அங்கிருந்து பளியன்குடிக்கு ஆட்டோவிலும் காலை ஐந்தரை மணிக்கு சென்றனர். ஏறுவதற்கு கடினமான மலைமீது ஏற ஆரம்பித்து, சரியாக எட்டரை மணிக்கு கோவிலை அடைந்து, சேரன் செங்குட்டுவனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுப்பப் பட்ட கோயிலின் ஒவ்வொரு கல்லையும் தொட்டுணர்ந்து சிலிர்த்துப் போனார்களாம். கம்பத்திலிருக்கும் கண்ணகி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் அனைவருக்கும் உணவளித்து மகிழ்ந்தார்கள். அங்கு வரும் தமிழர்கள் கண்ணகி தமிழர்களின் பண்பாட்டு அடையாளம் என்றும், உரிமை என்றும் பேசுவதை கேட்க முடிந்ததாம். முழுவதும் கேரளா காவல்துறையினரால் நிரம்பியிருந்த அப்பகுதியில் சொற்ப அளவில் இருந்த தமிழக காவல் துறையினரை பார்க்க முடிந்தது. அவர்களும் மக்களை ஒழுங்கு படுத்துவதை விட்டு, கூட்டமாக நின்று பேசிக் கொண்டு இருந்தனராம். நெகிழ்ச்சியான விடயம் என்னவென்றால் வயதானவர்கள் கடினமான மலையை கோலூன்றி ஏறி வந்து கண்ணகியை வழிபடுவதுதான். தமிழக அரசோ, தமிழை வைத்து பிழைப்பு நடத்துபவர்களோ இதைப் பற்றி கண்டு கொள்வதில்லை என்பது புரிந்த பொது இதயம் வலித்தது.

இதை பற்றி எல்லாம் நம்ம அரசியல் வாதிகளுக்கு எங்க நேரமிருக்கு..? சினிமாவுக்கு கதை வசனம் எழுதவும், பாராட்டு விழாவில் பங்கு பெறுவுமே நேரம் பத்தாது. கண்ணகி கோயில் பற்றிய சர்ச்சை கடந்த ஐம்பது வருடங்களாக உள்ளது. இதுவரையில் யாரும் இதுபற்றி எந்த கோர்ட்டிலும் வழக்கு வில்லை. தமிழனுக்கு இது பற்றி அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. ஆண்டுக்கு ஒரு முறை தான் இது பற்றி பேசுகிறார்கள். ஏன் தமிழ்நாடு அரசோ மக்களோ கேஸ் தொடுக்கவில்லை. இது அரசியல் மட்டும். மக்களுக்கு அவசியம் இல்லை என்பதாலே. ...

சரியாகத்தான் சொன்னார்களோ, தமிழ் இனி மெல்லச்சாகும்...