Showing posts with label குமுதம். Show all posts
Showing posts with label குமுதம். Show all posts

Saturday, May 30, 2009

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்

 

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது.

அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.