Showing posts with label உலகத்தமிழ் செம்மொழி மாநாடு. Show all posts
Showing posts with label உலகத்தமிழ் செம்மொழி மாநாடு. Show all posts

Friday, June 25, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள் - முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்

""தமிழுக்கு என்னென்ன செய்ய வேண்டுமென்று அரசுக்கு ஆணையிடுங்கள்,'' என்று செம்மொழி மாநாட்டு ஆய்வரங்கத்தில் பங்கேற்றுள்ள தமிழறிஞர்களிடம் முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.



உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்கங்களின் துவக்கவிழா, கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் உள்ள "டி' ஹாலில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் அரங்கத்தின் நேற்று காலை நடந்தது. ஆய்வரங்கத்தைத் துவக்கி வைத்து, முதல்வர் கருணாநிதி பேசியதாவது: தமிழ்மொழியை மேலும் செழுமைப்படுத்திடவும், அது என்றும் உயிரோட்டமுள்ள மொழி என்பதை மெய்ப்பித்திடும் வகையில், அதனை வளர்த்து 21ம் நூற்றாண்டின் தேவைகளுக்கேற்ப முன்னெடுத்துச் செல்லவும், உரிய ஆலோசனைகளையும், உயர்ந்த கருத்துக்களையும் இந்த ஆய்வரங்கத்தின் மூலமாகப் பெற இருக்கின்றோம். தமிழ்மொழி-தமிழர் பண்பாடு-நாகரிகத்தைப் பொறுத்தவரை, முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது எல்லா முனைகளிலும் புதிய எழுச்சியைக் காண முடிகிறது. ஏறத்தாழ 50க்கும் மேலான நாடுகளிலிருந்தும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான ஆய்வறிஞர்கள் இங்கே வந்திருப்பது, புதிய தெம்பையும், நம்பிக்கையையும் தருகிறது.



ஆய்வரங்குகளில் வைக்கப்படும் கட்டுரைகளும், விளக்கப்படும் கருத்துக்களும் மக்களைப் புதிய கோணத்தில் சிந்திக்கத் தூண்டிடும் தன்மையுடையவையாக இருத்தல் வேண்டும். அந்த அளவுக்கு மிக உயர்ந்த தரத்தை உடையவையாகக் கட்டுரைகளும், கருத்துரைகளும் இருந்தன என்று கருதப்படக்கூடிய அளவுக்கு இந்த ஆய்வரங்கங்கள் அமைந்திட வேண்டுமென்று விரும்புகிறேன். கொல்கத்தாவில் ஆசியக் கழகம் மூலமாக 1786ல் வில்லியம் ஜோன்ஸ் அறிவித்த இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கம், சமஸ்கிருதத்தை மையமாகக் கொண்டு அமைந்தது. திராவிட மொழிக்குடும்பம் என்னும் கருத்தாக்கத்தை 1816ல் எல்லிசு, 1856ல் கால்டுவெல் என ஐரோப்பிய அறிஞர்கள் பலரும் மையப்படுத்தி ஆராய்ந்தனர். இந்தோ ஆரிய மொழிக் குடும்பத்தினின்றும் வேறானது திராவிட மொழிக்குடும்பம். அக்குடும்பத்தின் முதன்மை மொழி, தமிழ் என்னும் உண்மையை உலகிற்கு அவர்கள் உணர்த்தினர். 1927ல் ஜான் மார்ஷலின் சிந்து வெளி நாகரிகம், திராவிட நாகரிகம் என்னும் கண்டுபிடிப்பு, உலகின் கருத்தைத் தமிழின் பால் ஈர்த்தது. அதன்பின்பே, தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் குறித்து அறிந்து கொள்வதில் உலக நாடுகளின் அறிஞர்கள் ஆர்வம் காட்டினர். அவர்கள் ஆராய்ந்து, தமிழின் தொன்மை, தனித்தன்மை, செவ்வியல் தன்மை, தமிழர்தம் இலக்கிய விழுமியம், கலைநயம், பண்பாட்டு வளம், நாகரிக முதிர்ச்சியை வெளிப்படுத்தினர். திராவிட இனத்தொன்மை பற்றி அறிஞர்கள் பலர் ஆய்வு செய்து அறிவித்துள்ளனர். திராவிடம் தந்த செழிப்பும், வலிவும்தான் ஆரிய நாகரிகத்தின் நலிவைப் போக்கி அதன் அடிப்படையை அலுங்காமல் காத்தது என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.

வட இந்திய திராவிட மொழிகளையும், தென்னகத் திராவிட மொழிகளையும் ஒப்பிட்டு, தமிழர்கள், தென்னாட்டிலிருந்து வடதிசை நோக்கிப் பரவினர் என வாதிட்டு நிலை நாட்டுகிறார் சோவியத் நாட்டு மொழி அறிஞர் சாகிரப்.  காஷ்மீரில் வாழும் மலைவாழ் மக்கள், திராவிட மொழிப்பிரிவின் கிளை மொழிகளைப் பேசுகின்றனர். பீகாரின் ராஜ்மகால் குன்றுகளில் வாழும் "குருக்கர்' என்போர் திராவிட மக்களே என்பது, அவர்கள் பயன்படுத்தும் நாட்டுப்புறப்பாடல்கள் மற்றும் பழங்கதைகளின் வாயிலாகத் தெரிய வருகிறது. இந்திய நாகரிக அடையாளமான சேலையும், வேட்டியும் திராவிட நாட்டின் கொடையாகுமென்று பேராசிரியர் சட்டர்ஜி, "இந்தோ-ஆரியன்-இந்து' என்ற நூலில் எழுதியுள்ளார். ஆரப்பா, மொகஞ்சதாரோ ஆராய்ச்சியில் கண்டறிந்த தாய்த் தெய்வ வழிபாடு, திராவிட வழிபாடேயாகும். அமெரிக்காவில் கொலராடோ ஆற்றின் கரையில் கட்டப்பட்ட சிவன் கோயில், திராவிடரின் கடவுளைக் காட்டுகிறது. ஆதிச்சநல்லூரின் மண்டை ஓடுகள், சிந்து வெளியில் கிடைத்த மண்டை ஓடுகளுடன் ஒத்துள்ளன.

உலகின் பழமை மிகு நாகரிகங்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கைப் பிற இனத்தவர்க்கும், இரு பங்கினைத் திராவிடர்களுக்கும் உரியதாக்குவதே உண்மையான பங்கீடு என்கிறார் சோவியத் நாட்டுப் பேராசிரியர் கோந்திர தோவ். எழுத்து முறையை எகிப்தியருக்குக் கொடையாகக்கொடுத்ததும் திராவிடர்களே. மெசபடோமியா நாகரிகமும், எலாமியர் ஏற்றமும் குமரிக் கண்டத் தமிழரிடமிருந்து சென்றவை. பாபிலோனிய மதகுரு ஒருவர் எழுதிய பழங்கதை ஒன்றில், மெசபடோமியர்க்கு நாகரிகம் கற்பித்த "ஒனசு' என்பவர், தமது குழுவினருடன் வந்தார், நாகரிகம் கற்பித்தார், ஏர் உழவுக் கருவிகளைக் கொடுத்தார், அறிவியல் கலை, கட்டடக் கலை, ஆண்டவன் வழிபாட்டையும் கற்றுக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. சங்ககாலம், கி.மு.4வது நூற்றாண்டின் தொடக்க காலம் எனக் கொண்டால், சங்க இலக்கியங்களிலிருந்து திராவிட நாகரிகத்தை அறிய முடிகிறது. ராமச்சந்திர தீட்சிதர் எழுதிய "தமிழர் தோற்றமும், பரவியதும்' என்ற நூலில் ""மத்திய தரைக்கடல், குமரிக் கண்டம், சிந்துவெளி, எகிப்து, சுமேரியா எங்கும் பரவியது தமிழர் நாகரிகமே'' என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியின் தொன்மையைப் பொறுத்தவரை, தொல்காப்பியம் போன்றதோர் பழமை இலக்கணம் எந்த மொழியிலும் இல்லை. அகம், புறம் என்னும் பொருண்மைப் பகுப்பும், திணை, துறை வகுப்பும், அகப்பாடல்களும், தூய காதலைப் போற்றும் மரபும், மனிதனை மையப்படுத்தும் பாடல்களும் கொண்ட சங்க இலக்கியம் போன்றதோர் தொல்லிலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. திருக்குறள் போல அற இலக்கியம் எந்த மொழியிலும் இல்லை. சிலப்பதிகாரம் போல ஒரு தொன்மையான காப்பியமும் எந்த மொழியிலும் இல்லை. ஆசியா முழுவதும் கோலோச்சிய பவுத்த சமயத்துக்கு மணிமேகலை போல ஒரு காப்பியம், பாலிமொழியிலும் இல்லை.

எல்லாச் சமயங்களையும், சைவ, வைணவ சமயங்களையும், சமண, பவுத்த சமயங்களையும், கிறித்துவ, இசுலாமிய சமயங்களையும், இதயத்திலே ஏந்திக் கொண்ட மொழி தமிழ். சமயந்தோறும் நின்ற தையல் எனப் போற்றப்பெறும் தமிழ், சமயங்களையும் வளர்த்துத் தன்னையும் வளர்த்துக் கொண்ட மொழி. திக்கெட்டும் பண்பாட்டுப் பங்களிப்பைச் செய்த இனம், தமிழினம். மயிலாடுதுறைக்கு அருகில் கழுக்காணி முட்டத்தில், இந்து சமய அறநிலையத் துறையினரால், முதலாம் ராசாதிராசன் காலத்தைச் சேர்ந்த கி.பி.1053வது ஆண்டைச்சேர்ந்த 85 செப்பேடுகள், கண்டெடுக்கப்பட்டுள்ளன. வில், புலி, கயல் ஆகிய சேர, சோழ, பாண்டியர்களின் முத்திரைகளோடு கிடைத்துள்ள அந்தச் செப்பேடுகள், வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பெரும் கருவூலமாகும். தஞ்சையை விசயாலயச் சோழன், பல்லவர்களிடமிருந்து கைப்பற்றியதற்கான புதிய வரலாற்றுக்குறிப்பு, இச்செப்பேட்டில் கிடைத்துள்ளது. இந்த செப்பேடு, மாநாட்டு கண்காட்சியில் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி முறையை உலகிற்கு எடுத்துச்சொல்லும் வரலாற்றுப் பதிவாக விளங்குகிறது உத்திரமேரூர்க் கல்வெட்டு. இவையெல்லாம் தமிழர்களின் தொடர்ச்சியான வரலாற்றுப்பதிவுகளுக்கு எடுத்துக்காட்டுக்களாகும். இந்த பெருமையையெல்லாம் தமிழர்கள்தான், வெளிநாட்டவர்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக்கொள்ளாத கால்டுவெல், ஆல்பர்ட் சுவைட்சர் போன்ற வெளிநாட்டவர், அவற்றைத் தமிழர்களுக்கு விளக்கிச் சொல்லும் நிலைதான் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

தமிழன் புகழ்மிக்க பாரம்பரியத்துக்குச் சொந்தக்காரன் என்பதை முதலில் தமிழன் உணர வேண்டும். தமிழ், தமிழினம், தமிழ் இலக்கியம், பண்பாடு, நாகரிகம் என்று ஒவ்வொரு துறையிலும் பதித்துள்ள முத்திரைகள், சாதனைகள், ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமிதம் தருபவை. அந்தப் பூரிப்போடு இருந்து விடாமல், தமிழுக்கும், தமிழினத்துக்கும் ஆற்ற வேண்டியவை, இன்னும் ஏராளமாக உள்ளன. இந்திய மொழிகள், உலக மொழிகள் அனைத்திலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். கிரேக்கம், பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளில் தமிழியல், தமிழினம் குறித்தும் எழுதப்பட்ட நூல்கள், தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். உலகெங்கும் உள்ள தமிழியல் நூல்கள், ஆவணங்கள் மின்மயமாக்கப்பெற்று, உலகில் உள்ள ஒரு பகுதியில் உள்ளவர்களும் அவற்றைப் பயன் படுத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும். துறைதோறும் தமிழ் பயன் பட வேண்டும். வகை வகையாய் அகராதிகளும், தொகை தொகையாய்க் கலைக் களஞ்சியங்களும் வர வேண்டும். இன்னும் என்னென்ன தமிழுக்கு வேண்டும் என ஆய்வரங்கத்திலும், இணைய மாநாட்டிலும் பங்கேற்கிற அறிஞர் பெருமக்கள் எடுத்துச் சொல்லி, இந்த அரசுக்கு ஆணையிட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். உயிருள்ளவரை தமிழுக்காகப் பாடுபட, நம்மைத்தமிழுக்கு முழுமையாக ஒப்படைத்திட, நமது தமிழ்த் தொண்டுப் பயணத்தை மேலும் வேகமாகத் தொடர்ந்திட, உரிய ஊக்கத்தையும், உறுதியையும் இந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நமக்கு அளித்துள்ளது.

Thursday, June 24, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு : சில சுவையான படகாட்சிகள்

சில சஞ்சலங்கள்: ஆங்கில மாநாடா இல்லை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடா?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துவக்கவிழாவில் ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்தியதலும், சில சஞ்சலங்கள் மாநாட்டுக்கு வந்த மக்களிடையே பெரும் சோர்வு ஏற்பட்டது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை கொடிசியா சாலையிலுள்ள மாநாட்டு வளாகத்தில் நேற்று காலை துவங்கியது. வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ள இம்மாநாட்டை, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் நேற்று காலை துவக்கி வைத்தார்.மேடைக்கு எல்லாத் தலைவர்களும் சரியான நேரத்துக்கு வந்து விட்டதால், திட்டமிட்டபடி காலை 10.30 மணிக்குத் துவங்கி விட்டது. தேசிய கீதத்துடன் விழா துவங்கியது. செம்மொழி மாநாட்டின் மையநோக்குப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அப்போது, பொதுமக்கள் பெரும் உற்சாகமாக கைதட்டினர். ஜனாதிபதிக்கு முதல்வரும், மற்றவர்களுக்கு துணை முதல்வர் ஸ்டாலினும் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.துணை முதல்வருக்கும், தலைமைச் செயலர் ஸ்ரீபதிக்கும் மாநாட்டு தனி அலுவலர் அலாவுதீன், நினைவுப்பரிசு வழங்கினார்.

அஸ்கோ பர்போலோவுக்கு வழங்கப்பட்ட, "கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது,' ஐம்பொன்னால் ஆன திருவள்ளுவர் சிலையுடன், 10 லட்ச ரூபாய் பெறுமானம் உடையது என்று விளக்கப்பட்டது. மொழி வல்லுனர் ஜார்ஜ் ஹார்ட், சில வார்த்தைகளை தமிழில் பேசிவிட்டு, பின்பு ஆங்கிலத்தில் பேசினார்.அடுத்ததாக, வா.செ.குழந்தைசாமி பேசினார்.

அவருக்குப் பின், பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பேசினார். அவர் உட்கார்ந்தவாறே பேசியதால், அவருக்கு, "கார்டுலெஸ் மைக்' தரப்பட்டது. இடையிடையே அது தடைபட்டதால், முதல்வர் சற்று கடுப்பானார்.ஆனால், "மைக்' மாற்றப்படுவதற்கு முன்பே, அது சரியாகி விட்டது. அவர், ஐந்து நிமிடம் தமிழ் பேசும் வரை தகராறு செய்த "மைக்,' ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்ததும் சரியாகி விட்டது.

அடுத்ததாக, விருது பெறும் அஸ்கோ பர்போலோ குறித்து தமிழக நிதியமைச்சர் அன்பழகன் விளக்கிப்பேசினார்.விருது பெற்ற அஸ்கோ பர்போலோவும், ஒரு சில வார்த்தைகளைத் தவிர முழுக்க முழுக்க ஆங்கிலத்திலேயே பேசினார். ஜார்ஜ் ஹார்ட், பர்போலோ இருவரும் பேசி முடிக்கும்போது, "தமிழ் வாழ்க' என்று கூறியபோது, சிலர் கை தட்டினர்.முதல்வர் பேசுகையில், செம்மொழித் தகுதி வழங்குவது குறித்து சோனியா தனக்கு எழுதிய கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் படித்து, அதற்குரிய தமிழாக்கத்தையும் விளக்கினார்.

அவருக்குப் பின் பேசிய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், தமிழக கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா இருவருமே ஆங்கிலத்தில் பேசினர். முடிவில், தலைமைச் செயலர் ஸ்ரீபதி, தமிழ், ஆங்கிலம் இரு மொழியிலும் நன்றி தெரிவித்தார். தமிழ் மாநாட்டின் துவக்க விழா முழுவதும், ஆங்கில ஆதிக்கமே அதிகம் இருந்தது.ஆங்கிலத்தில் பேசியதை தமிழில் மொழி பெயர்க்கவும் எந்த ஏற்பாடும் செய்யப்படாததால், ஜனாதிபதி ஆங்கிலத்தில் பேசியபோது, மக்கள் சோர்வு அடைந்து பேசத்துவங்கி விட்டனர்.

* பந்தலுக்குள் வந்த சிலரை போலீசார் சோதனையிட்டபோது, அவர்களிடம் மது பாட்டில்கள் இருந்தன. அவற்றையும், சிகரெட் பாக்கெட், தீப்பெட்டியையும் வாங்கி வைத்துக்கொண்டனர். ஒரு சிலர் கொடுக்க மனமில்லாமல், மண்ணைத் தோண்டி புதைத்துச் சென்றனர்.

* பல ஆயிரம் பேருக்கு மதிய உணவு கிடைக்கவில்லை. மானிய விலையில் உணவு கொடுத்த இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. குறைவான எடையிலும், அதிக விலையிலும் இருந்ததாகக் கூறி, தனியார் உணவு நிறுவனங்கள் அமைத்திருந்த உணவுக்கூடம்-2க்குச்சென்று தேவையானதை வாங்கிச் சாப்பிட்டனர்.

* 300 கோடிக்கு மேல் செலவு என்று சொல்லும் போது சில விசயங்களில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம், அதி வேக மாநாடு ஆகிவிட்டபடியால் இந்த கதி. மொழி பெயர்ப்பு என்பது மக்களுக்காக நடத்தப்படும் இந்த மாநாட்டில் முக்கியமான ஒன்று. மேடையில் அமர்ந்திருக்கும் ஒருவர் கூட இதை பத்தி சிந்திக்கவில்லை, இழையில் சோறை போட்டுவிட்டு சாம்பர் போடாமல் சென்றால் கத்தி கூப்பாடு போடுவது போலத்தான் இவ்விசயத்தில் மொழிபெயர்ப்புக்கு உடனடி வசதி செய்திருக்க வேண்டும். உணவுக்காக டெண்டர் விடம் போதே தெரிந்ததுதான் அது சரிப்பட்டு வராது என்று, இதை ஆய்வு செய்ய அதிகாரிகள் வேறு. ம்.... இன்னும் பாக்கியிருக்கிறது மாநாடு நடக்கட்டும், நடக்கட்டும்.......

* நமது தமிழ் மகன் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடி மகன் - டாக்டர் A P J அப்துல் கலாம்க்கு அழைப்பு அனுப்பாதது ஏன்? ஏன் ?ஏன்?  நமது கலாம் அவர்களுக்கு அழைப்பிதழ் இல்லை என்பது வர்ததிகுரியது. தான் செல்லுமிடமெல்லாம் திருக்குறள் பேசி அதன் ஆங்கில மொழி பயர்பையும் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெர்மைசெற்கும் ஒரு உத்தம மனிதற்கு அழைப்பிதழ் இல்லை என்பது மிகவும் வெட்ககேடு...  நமது தமிழ் மகன் மற்றும் இந்தியாவின் முன்னாள் குடி மகன் - டாக்டர் A P J அப்துல் கலாம் க்கு அழைப்பு அனுப்பாதது ஏன்?

* இந்த மாநாட்டில் ஆங்கிலத்தின் ஆதிக்கம் செய்தி எனக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.ஆள்பவர்கள் உண்மை நிலையை அறிந்தும் என் இப்படி வரிப்பணத்தில் ஆட்டம் போடுகிறார்கள் என்பது இன்னமும் எனக்கு புரியவில்லை.ஒரு உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறேன் இந்த மாநாட்டின் முக்கிய பொறுப்பாளர்கள் அது முதல்வரானும் மற்ற மந்திரிகளானாலும் அதிகாரிகளானாலும் சரி இவர்களின் குழந்தைகளும் பேரன் பேத்திகளும் தமிழ் பள்ளிகளில் படிக்கிறார்களா இல்லோ கான்வேண்டிலா?...

* முதலில் சென்னை தமிழை திருத்த வேண்டும். தமிழ் குடி தாங்கிகள் தங்கள் பிள்ளைகளை தமிழ் வழி கல்வி பயில செய்ய வேண்டும்.தமிழ் வழி கல்வி பயிலுவோருக்கு இட ஓதிக்கிடு செய்ய வேண்டும்.

இன்னும் சில சஞ்சலங்கள் தொடரும்..
கண்டிப்பாக இது காயப்படுத்த அல்ல, திருந்த மட்டுமே...       :)

அரசியல் சாயம் இல்லை: உலகத்தமிழ் செம்மொழி மாநாடு

சென்னை: நடப்பது தமிழ் மாநாடு, இதில் தமிழுக்கு மட்டுமே முன்னுரிமை என்பதால், திமுகவின் கட்சிக் கொடிகள் முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளன.

உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளை பார்வையிடுவதற்காக, முதல்வர் கருணாநிதி கடந்த மாதம் 24, 25ம் தேதிகளில் கோவைக்கு சென்றிருந்தார். பொதுவாகவே முதல்வர் கருணாநிதி எந்த நிகழ்ச்சிக்குச்சென்றாலும், அது கட்சி நிகழ்ச்சியானாலும் சரி, பொது நிகழ்ச்சியானாலும் சரி, அரசு விழாவானாலும் சரி திமுக கொடிகளும் தோரணங்களும் பளபளக்கும்.

உலகத் தமிழ் மாநாட்டுக்காக இரு தினங்கள் முன்கூட்டியே, முதல்வர் கருணாநிதி கோவைக்கு வந்திருந்தபோதும் திமுகவினர், வழி நெடுகிலும் திமுக கொடியை பறக்கவிட்டும், தோரணங்கள், கட்டவுட்டுகள், பேனர்கள் அமைத்தும் வரவேற்பு கொடுத்தனர். ஆனால், அதைப் பார்த்து முதல்வர் மிகுந்த அதிருப்தி அடைந்தார். தமிழ் மொழிக்காக நடத்தப்படும் மாநாட்டுக்கு கட்சி சாயம் பூசக்கூடாது என்பதில் கருணாநிதி மிக உறுதியாக இருந்தார்.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு ஏற்பாடுகளைப் பார்வையிட்டுவிட்டு சென்னைக்கு வந்தவுடன், இது குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த முதல்வர், கோவை மாநகர் முழுவதும் திமுக கொடி பறக்கவிட்டது குறித்து தனது வருத்தத்தையும் தெரிவித்தார். அந்த அறிக்கையில், "கோவை விமான நிலையம் தொடங்கி, வ.உ.சி. மைதானம் வரை மாநகரின் பல்வேறு இடங்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடிகள், பதாகைகள், கழகத்தின் அனைத்து நிலைகளிலும் பொறுப்பேற்றுச் செயல்பட்டுக்கொண்டிருப்போரின் உருவங்கள் தாங்கிய பேனர்கள்', தெவிட்டிப் போகும் அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருந்தன.
இதே காட்சியை முதல் நாளே, கோவை மாநகருக்குச் சென்ற துணை முதல்வர் தம்பி மு.க.ஸ்டாலினும் கவனித்துக் கண்டித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கட்சி சார்பற்ற முறையில் தமிழ் மொழிக்காகவும், தமிழர்களுக்காகவும், தமிழக அரசால் நடத்தப்படவிருக்கிற மாநாடே தவிர, அது எள்ளின் முனையளவும் கூட கட்சி மாநாடாக காட்சி அளித்துவிடக்கூடாது என்பதில் நான் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன். கழகக் கொடிகள், பதாகைகளுக்குப் பதிலாக, பொது மக்களுக்கு எவ்வித சங்கடமும் ஏற்படாத வகையில்-சங்க இலக்கியக் காட்சிகள் அடங்கிய பேனர்கள், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் இலச்சினை தாங்கிய பதாகைகள், பழங்கால மன்னர்களின் படங்கள் போன்றவற்றை அமைக்க வேண்டும். அதுவே எனக்கு மட்டுமல்லாமல் மாநாட்டுக்கு வரக்கூடிய மக்களுக்கும், வெளிநாட்டினருக்கும் நிறைவு அளிக்கக்கூடியதாக இருக்கும் என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படவேண்டும்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.

கொடிகள்
அகற்றம்!:
கருணாநிதியின் உத்தரவுக்கு இணங்க, இப்போது கோவை மாநகரில் எந்த இடத்திலும் திமுக கட்சிக் கொடியைக் காண முடியவில்லை. வழக்கமாகப் பறந்த இடங்களில் கூட அகற்றப்பட்டுள்ளன.
அரசியல் சாயம் பூசப்படாமல் முழுக்க, முழுக்க செம்மொழியாம் தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழை முன்னிலைப்படுத்தி பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழுக்கு
பெருமை சேர்க்கும்...
கோவை நகரில் எங்கு பார்த்தாலும் தமிழ் மொழியின் பெருமை, வரலாற்றை பறை சாற்றக் கூடிய வகையில், பழங்கால இலக்கிய காட்சிகளுடன் தமிழை மட்டுமே முன்னிலைப்படுத்தியதற்கான காட்சிகளை மட்டுமே காணமுடிகிறது. கோவை மாநகரம் முழுக்க தமிழ் மணம் கமழுகிறது.
தமிழர் ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் விசேஷம் போல மக்கள் ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சிகளைப் பற்றி விசாரித்தும் பங்களித்தும் வரும் வகையில் இணக்கமான சூழல் நிலவுகிறது. இதற்குக் காரணம் கருணாநிதியின் இந்த உத்தரவுதான் என்கிறார்கள் பார்வையாளர்கள்.