Showing posts with label Congress. Show all posts
Showing posts with label Congress. Show all posts

Saturday, May 14, 2011

திமுக, காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

குடும்ப ஆதிக்கம், அராஜகம், ஊழல் மற்றும் தாங்க முடியாத விலைவாசி என்பவற்றுக்கு அப்பால் ஈழத் தமிழர்கள் படுகொலையில் துணை நின்ற காங்கிரஸை ஆதரித்ததே தி.மு.க. செய்த மாபெரும் தவறாகும். சினிமா, தொழில்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளையும் தங்கள் குடும்ப ஆதிக்கத்துக்குள் கொண்டுவர முயன்ற குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது

திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான்.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.

மேலும் உட்கட்சிப் பூசல், கோஷ்டி கலவரங்கள், ஆளாளுக்கு நாட்டாமை, தங்கபாலுவின் தான்தோன்றித்தனம் ஆகியவையும் கூட காங்கிரஸுக்கு வேட்டு வைத்து விட்டது. தங்கபாலு மயிலாப்பூரில் வேட்பாளராக நிற்க செய்த தகிடுதத்தனங்களும் காங்கிரஸாரையே கடுப்பாக்கி விட்டது. இத்தனையும் சேர்ந்து இன்று காங்கிரஸை காலி செய்துள்ளது.

காங்கிரசின் வீழ்ச்சி தமிழினத்தின் விடியலுக்கான அறிகுறி. இனி வரும் காலங்களில் தமிழினத்திற்கு எதிரான எண்ணமோ செயலோ எந்த அரசியல் கட்சியிடம் இருந்து வெளிப்பட்டாலும் அவர்களுக்கும் இதே கதி தான் ஏற்படும்.